Friday, February 4, 2011

இன்று தான் இலங்கை விடிந்ததாம்........


                    
மாசி மாத தென்றல் காற்று 
மார்கழி குளிரோடு மார்பில் பட
படிந்து கிடந்த வெண் பனித்துளிகள்
பூ இதழ்களோடு காதல் உரைக்க 
மொட்டை மாடி வாயிலிலே 
காடாய் கிடந்த கடற்கரை நோக்கியபடி 
காத்திருக்கிறேன்

அழகிய கடற்கரையில் ஆங்கங்கே
அழுக்காக்கி கொண்டிருக்கும் தெருநாய்கள்
நிசப்தமான வீதிகளில் 
ஓசை இன்றி சில மனிதர்கள்
என்ன ஆயிற்று இன்று.....

காலையும் ஓடிக்கொண்டிருக்கிறது
கடற்கரையில் காதலர்களை காணோமே
"சுனாமி" என்று உரைத்த போதும்
 தான் நிலம் மறக்கத் தவிர்த்தவர்கள்
இன்று மட்டும் இருப்பிடம் மறந்ததேன்

"அன்றொரு திங்களில் 
இன்று போலொரு நாளில் தான் 
என் நாடும் விடிந்ததாம்"
அங்கே ஒரு கிழவன் பிதற்றியபடி
கொஞ்சம் பெருமிதத்துடன்  
வேறு வெட்டி வேலை இல்லை 
அவனருகில் சென்றேன் 
என்னவென்று விடுப்பறிய

"இன்று தானடா தம்பி 
இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் "
புன்னகையுடன் அவன் முகம் 
"அப்படியா தாத்தா
எவ்வளவு காசு கொடுத்தார்கள்
அதை வாங்குவதற்காக"
அறியாச் சிறுவனில்லை 
ஆனபோதிலும் கேட்டு விட்டேன் 
அவன் முகம் வெம்பியதையும் 
காண நான் தவறவில்லை 

இப்படி ஒரு நாளா
கண்ணுக்கு கூட ஒன்றும் 
காதல் தரவில்லையே 
கவலையுடன் திரும்புகிறேன் 
வீதி ஓரத்தில் இன்னொருவன்
அவனும் பிதற்றுகிறான்..........

               இப்படிக்கு
             ப்ரியமுடன்............ Prakhash

No comments:

Post a Comment